தர்மசாலா : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வங்கதேசத்தை இங்கிலாந்து அணி தர்மசலாவில் எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பாரிஸ்டோ 52 ரன்களிலும் ஜோ ரூட் 82 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

தொடக்க வீரர் டேவிட் மாலன் அதிரடியாக விளையாடி 107 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும் ஐந்து சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று கேப்டன் பட்லர் 20 ரன்களிலும், ஹாரி புரூக் 20 ரன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது .வங்கதேச தரப்பில் மெஹதி ஹசன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் டான்சித் ஹசன் ஒரு ரன்னிலும் நஜ்முல் ஹுசைன் டக்அவுட் ஆகியும் கேப்டன் ஷகிபுல் ஹசன் ஒரு ரன்னிலும் மெஹதி ஹசன் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் வங்கதேச அணி 49 ரன்களை சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் பொறுப்பாக விளையாடி 66 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார். இதைப் போன்று வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிகுர் ரஹீம் அரை சதம் கடந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து வங்கதேச அணியின் தோல்வி உறுதியான நிலையிலும் அந்த அணி தோல்வியின் வித்தியாசத்தை குறைப்பதற்காக கடுமையாக போராடியது.
வங்கதேச வீரர் தவ்ஹித் 61 பந்தில் பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மெஹதி ஹசன் 14 ரன்களிலும் டஸ்கின் அகமது 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 48.2 ஓவர்கள் 227 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ரீஸ் டோப்லி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.