மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி பந்துவீச்சை இங்கிலாந்து அணி மைதானத்தின் நான்கு பக்கமும் துவம்சம் செய்தது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய ஜானி பாரிஸ்டோ மற்றும் டேவிட் மாலன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாரிஸ்டோ 52 ரன்களில் வெளியேற சிறப்பான ஆட்டத்தை ஆடிய தொடக்க வீரர் டேவிட் மாலன் 117 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். இதனை தொடர்ந்து கேப்டன் ஜாஸ்பட்லர் அதிரடியாக விளையாட முற்பட்டு பத்து பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதேபோன்று ஹாரி புரூக் 20 ரன்களும், லிவிங்ஸ்டோன் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க நட்சத்திர வீரர் ஜோ ரூட் 82 ரன்கள் சேர்த்தார். இறுதியில் கிறிஸ்த வொவக்ஸ் 14 ரன்களும் ஆதில் ரசித் 11 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்திருக்கிறது.
வங்கதேச பந்துவீச்சு தரப்பில் மெஹதி ஹசன் நான்கு விக்கெட்டுகளையும் ஷோரிபுல் இஸ்லாம் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்கள். நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று நெருக்கடியில் விளையாடி வருகிறது.