டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்தபோது இந்திய ரசிகர்கள் கோலி! கோலி! என கத்தி அவரை வெறுப்பேற்றினர்.
டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. டெல்லியில் விராட் கோலி பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் இந்த போட்டியை காண அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.

மேலும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் விராட் கோலிக்கும் ஐபிஎல் போட்டியில் இருந்து பிரச்சனை தொடர்ந்து வருகிறது. லக்னோ ஆர்சிபி அணிக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலியும் நவீன் உல் ஹக்கும் ஒருவரை ஒருவர் திட்டி கொண்டனர். அதன் பிறகு இந்த பிரச்சனை முற்றிலும் சமூக வலைத்தளத்திற்கு மாறியது.
விராட் கோலி விளையாடும்போதெல்லாம் அவரை வெறுப்பேற்றும் வகையில் நவீன் சமூக வலைத்தளத்தில் மாம்பழத்தை வைத்து பதிவு போட்டு வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நவீன் உல் ஹக் மீது பெரும் வன்மத்துடன் இருந்த ரசிகர்கள் அவர் செல்லும் இடமெல்லாம் கோலி கோலி என கத்தி அவரை வெறுப்பேற்றி வந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த நவீன் உல் ஹக்கை கோலி கோலி எனக் கத்தி ரசிகர்கள் கடுப்பேற்றினர். இதனால் நவீன் உல் ஹக் முகம் முற்றிலும் மாறியது. இதனை அடுத்து நவீன் உல் ஹக் எதிர்கொண்ட பந்தில் அவர் டபுள்ஸ் ஓடினார்.அந்த பந்தை பிடித்த விராட் கோலி, கேஎல் ராகுலிடம் எறிந்தார்.

ஆனால் அதற்குள் நவீன் இரண்டு ரன்கள் ஓடி விட்டார். இதனால் கடுப்பான விராட் கோலி கேஎல் ராகுலை எதற்கு இரண்டு ரன் ஓட விட்டாய் என திட்டினார். இதிலிருந்து நவீன் உல் ஹக் மீது விராட் கோலி கோபத்தில் தான் இருக்கிறார் என தெரிகிறது. எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ரசிகர்கள் விராட் கோலி !விராட் கோலி! என கத்தி அவரை உசுப்பேத்தி விட்டனர். தற்போது பந்துவீச்சில் இருவருக்கும் இடையே என்ன நடக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.