மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாவதாக இறுதிப் போட்டிக்கு செல்ல போகும் அணி எது என்பதை தீர்மானிக்கக்கூடிய அரை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இன்று பல பரிட்சை நடத்துகிறது.
இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் பார்வையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அது இந்தியாவுக்கு சாதகமாகவும் சுலபமாகவும் இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்த தொடரில் தொடக்கத்தில் அவர்கள் தடுமாறினாலும், பிறகு தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாங்கள் ஏன் ஐந்து முறை சாம்பியன்களாக இருக்கிறோம் என்பதை நிரூபித்து விட்டார்கள். ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவம் மிகுந்த அணியாக உள்ளது.
அவர்களால் எந்த நெருக்கடியான கட்டத்திலும் இருந்தும் மீள முடியும்ம் அதிரடியாக ஆடக்கூடிய பலவீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். மேலும் வேகபந்து வீச்சு, சுழற்பந்துவீச்சிலும் அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இதனால் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்தால் அது நிச்சயம் கொஞ்சம் சவாலான போட்டியாக தான் இந்தியாவுக்கு இருக்கும். மறுபக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு இயற்கையாகவே ஒரு பிரச்சனை இருக்கிறது.
அதாவது நாக்அவுட் போன்ற முக்கியமான ஆட்டத்தில் அவர்கள் சொதப்பி விடுவார்கள. இதனால் அவர்களை சோக்கர்ஸ் என்று தான் ரசிகர்கள் அழைப்பார்கள். இதனால்தான் வரலாற்றில் அவர்கள் ஒருமுறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருந்தாலும், முக்கிய கட்டத்தில் அவர்கள் காலை வாரி விடுவார்கள். ஏன் இன்று நடைபெறும் அரையிறுதியில் கூட அவர்கள் சோக் அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஒரு வேலை அவர்கள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்தால் அந்த அணியில் அதிபயங்கர வீரர்கள் இருந்தாலும் கூட அவர்கள் நிச்சயமாக சோக்காக வாய்ப்பு இருக்கிறது. இது காரணமாகவே இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதை விட தென்னாபிரிக்காவை எதிர்கொள்வது தான் சிறந்தது.