மும்பை : 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலககோப்பை தொடருக்கான அட்டவணையை பார்த்த போது, இந்திய ரசிகர்களுக்கு உதட்டில் புன்னகை மலர்ந்திருக்கும். இதற்கு காரணம், அட்டவணை நிச்சயம் இந்தியாவுக்குசாதகமாக அமைக்கப்பட்டது தான்.
முன்பு எல்லாம், அணிகள் பல குரூப்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். அதன் பிறகு சூப்பர் 6 சுற்று, அரையிறுதி என பெரிய கிணற்றை தாண்ட வேண்டும். ஆனால் தற்போது எல்லாம் களமிறங்கும் 10 அணிகளும், ஒரே குரூப் தான்.

இதில், எந்த அணிகள் டாப் 4 இடத்தை பிடிக்கிறார்களோ, அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இதன் காரணமாக, பலம் வாய்ந்த 4 அணிகள் எப்படியும் அரையிறுதி சுற்றுக்கு சென்றுவிட முடியும். இதே போன்று ஆடுகளமும் இந்தியாவுக்கு சாதகமான இடங்களில் தான் போட்டி நடைபெறுகிறது.
சென்னையில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா விளையாடினால், நமக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம். ஆப்கானிஸ்தானை டெல்லியிலும், நியூசிலாந்தை தர்மசலாவிலும் வீழ்த்துவது இந்தியாவுக்கு பெரிய நிரமம் இருக்காது.
பாகிஸ்தானை அகமதாபாத்திலும், வங்கதேசத்தை புனேவிலும் இந்திய அணி எதிர்கொள்கிறது. இதிலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு தான் அதிகம். லக்னோ போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதன் பிறகு குவாலியைர் சுற்றில் இருந்து வரும் 2 அணிகளை முறையே மும்பை மற்றும் பெங்களூருவில் எதிர்கொள்ளும் இந்தியா, , தென்னாப்பிரிக்காவை கொல்கத்தாவில் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதில் குறைந்தபட்சம் இந்தியா ஐந்து அல்லது ஆறில் வென்றால் நமக்கு அரையிறுதி சுற்று உறுதி. இந்தியாவுக்கு சவாலை கொடுக்க கூடிய அணிகள் என்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா,பாகிஸ்தான் தான். இதில் இந்திய அணி குறைந்தது 2 ஆட்டத்தை வென்றால் கூட போதுமானது. ஆனால் எஞ்சிய அணிகளை இந்தியா வீழ்த்த வேண்டும்.
அதே சமயம், இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் தான் இந்த நிலைமை. அதுவே, ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தால், நமது வேகப்பந்துவீச்சு இருக்கும் நிலைக்கு கொஞ்சம் சிரமம் தான். அரையிறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு உறுதி தான். ஆனால், அவர்கள் அதன் பிறகு என்ன செய்ய போகிறார்கள் என்பதில் தான் ஆட்டமே இருக்கு.