மும்பை : 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 12 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்திய அணி இந்த தொடரில் எப்படியாவது உலக கோப்பையில் வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி இரண்டு முறையும் அரையிறுதியில் தோல்வியை தழுவியது. இதேபோன்று 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரையும் இந்தியா வெல்லவில்லை.

இதனால் உலகக்கோப்பை போட்டி சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மைதானங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதால் பேட்டிங் வலுவாக இருக்கும். இதனால் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தும், அதனை வெளிநாட்டு அணிகள் துரத்தி விடுகிறது.
உதாரணத்திற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் எவ்வளவு இலக்காக இருந்தாலும் அதனை எளிதாக துரத்தி விடுகிறார்கள். இதனால் இந்தியா சொந்த மண்ணில் விளையாடுகிறது என்ற சாதகம் இல்லாமல் போய்விடுகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்தியா ஒரு தில்லாலங்கடி வேலையை செய்ய இருக்கிறது.

அதன்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் இந்தியா விளையாடும் போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என மைதான பராமரிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு வீரர்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து விடுவார்கள்.
இதனை பயன்படுத்தி இந்திய அணி எளிதாக வென்று விடலாம் என பிசிசிஐ பிளான் போட்டு இருக்கிறது. இதேபோன்று பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதும் ஆட்டத்தை அகமதாபாத்தில் நடத்தவும் மற்ற பாகிஸ்தான் போட்டிகளை சென்னை அல்லது பெங்களூரில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று வங்கதேசம் விளையாடும் அனைத்து போட்டிகளையும் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா அமைக்க இருப்பது வெளிநாட்டு வீரர்களை கலக்கமடைய செய்திருக்கிறது.