மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான கடைசி கட்ட தயாரிப்பில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் பத்து அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணி மீது ரசிகர்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் தற்போது ஆசிய கோப்பை ஆஸ்திரேலியா தொடர் என அடுத்தடுத்து இந்திய அணி வெற்றி பெறுவது ரசிகர்களை குஷி அடைய செய்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இது ரோகித் சர்மா தலைமையிலான அணிக்கு கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது.
எனினும் இந்தியா மீது உள்ள நெருக்கடியை அவர்கள் எப்படி சமாளித்து விளையாட போகிறார்கள் என்பதிலேயே வெற்றி இருக்கிறது. இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிச் சற்றுக்கு செல்ல போகும் டாப் 4 அணிகள் எது என்பது குறித்து தற்போது பேசி இருக்கிறார்.
இதில் அவர் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் வெற்றி பெற்றதன் மூலம் உலக கோப்பையில் ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை வீரர்கள் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இர்பான் பதான் குறிப்பிட்டுள்ள நான்கு அணிகளில் ஆசிய அணிகள் இந்தியாவைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசிய அணிகளில் இந்தியா பலம் வாய்ந்ததாக இருந்தாலும் பாகிஸ்தானையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இலங்கை அணி ஆசிய கோப்பை இறுதி போட்டி வரை வந்து உள்ளதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் ஆசிய அணிகளின் ஆதிக்கம் உலகக்கோப்பை தொடரில் இருக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள்.