மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டி தொடங்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது.

இந்த நிலையில் உலககோப்பை தொடர் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. சில போட்டிகள் பகல் நேரம் ஆகும். பெரும்பாலான போட்டிகள் பகல் இரவு ஆட்டமாகும் நடைபெறும். பகல் நேரத்தில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும்.
இதேபோன்று பகல் இரவு ஆட்டங்கள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் மதியம் 2 மணிக்கு தான் தொடங்கும் என்பது குறிப்பிடப்பட்டது. அலுவலகத்துக்கு சென்று வருபவர்கள் இரண்டாவது இன்னிங்ஸை பார்க்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் இது நிச்சயம் பெரிய பாதிப்பு ஒன்றை உருவாக்கப் போகிறது. ஏனென்றால் போட்டிகள் அனைத்தும் அக்டோபர் மாதம் நடைபெறுவதால் நிச்சயம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பணிபொழிவு அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு போட்டியை 12 அல்லது ஒரு மணிக்கு தொடங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் ரசிகர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் இரண்டாவது பந்து வீசும் அணிக்கு பெரும் பாதிப்பாக பனிப்பொழிவு அமையும் என்பது பலரின் கவலையாக இருக்கிறது.
இதனால் இந்த தொடரில் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றப்பட்டால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போய்விடும். இதன் காரணமாக அனைத்து போட்டிகளையும் பகலில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படி இல்லை என்றால் 12 அல்லது ஒரு மணிக்காவது போட்டியை தொடங்குங்கள் என்று ரசிகர்கள் எழுப்பிய கோரிக்கையை ஐசிசி நிராகரித்து இருக்கிறது.
விளம்பரதாரர்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதேபோன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. இது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.