ஐதராபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 322 ரன்களை குவித்து இருக்கிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற ஆறாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து தொடக்க வீரராக நியூசிலாந்தின் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். நெதர்லாந்து அணி முதல் மூன்று ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி நியூசிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இன்னும் சொல்லப்போனால் மூன்று ஓவரில் நியூசிலாந்து அணி ஒரு ரன்னை கூட எடுக்காத நிலையில் தடுமாறியது. எனினும் மூன்று ஓவருக்கு பிறகு நியூசிலாந்து அணி தங்களது வேலையை காட்டத் தொடங்கியது. கான்வே 40 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, இரண்டாவது விக்கெட்டுக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடியது.
முதல் போட்டியில் சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா இன்றைய ஆட்டத்தில் 51 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதே போன்று டாரல் மிச்செல் 48 ரன்கள் சேர்க்க சிறப்பாக விளையாடிய வில் யங் 70 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸ், நான்கு ரன்களிலும் மார்க் சாட்மன் ஐந்து ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
எனினும் கேப்டன் டாம் லாத்தம், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சிஎஸ்கே வீரர் மிச்சல் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 36 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.

நெதர்லாந்து போன்ற நாட்டுக்கு எதிராக நியூசிலாந்து அணி 400 ரன்கள் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 322 ரன்கள் வரை நியூசிலாந்தை அடிக்க விட்டதே நெதர்லாந்து செய்த பெரிய காரியம்தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.