ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 48 ஆண்டுகளில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சேஸிங்கில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் இலங்கையில் பாகிஸ்தான் அணியும் பலப் பரிட்சை நடத்தியது. முதல் ஆட்டத்தில் பேட்டிங் சிறப்பாக விளையாடும் தோல்வியை தழுவிய இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் களம் இறங்கியது.

உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை பாகிஸ்தானை இலங்கை ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. இதனால் வரலாற்றை மாற்றும் முனைப்புடன் களமிறிங்கய கேப்டன் சனாகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் குசல் பெரேரா டக் அவுட்டாக, நிஷாங்கா அரை சதமும், குசல் மெண்டிஸ்,சதிரா சமரவிக்ரமா ஆகியோர் சதமும் விளாசினர்.
எனினும் நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இலங்கை அணி 400 ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் தான் எடுத்தது. பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் ஹசன் அலி 71 ரன்கள் விட்டு கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 12 ரன்கள் வெளியேற கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதனால் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். எனினும் இளம்வீரர் அப்துல்லா ஷபிக்கும் முகமது ரிஸ்வான் ஜோடியும் இணைந்து அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். உலகக்கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் விளையாடிய அப்துல்லா ஷபிக் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.அவர் 103 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்தார்.
இதில் மூன்று சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும் முகமது ரிஸ்வான் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்தார். அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு வலியால் அவதிப்பட்ட போதும் ரிஸ்வான் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டர்களும் மூன்று சிக்ஸரும் அடங்கும். அவருக்கு துணையாக இறுதியில் சவுத் ஷகில் 31 ரன்களும், இப்திகார் அஹமத் 22 ரன்களும் எடுக்க பாகிஸ்தான அணி 48.2 ஓவர்களில் எல்லாம் நான்கு விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது .
இலங்கை அணி எக்ஸ்ட்ராவாக 26 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் உலககோப்பை தொடரில் சேசிங்கில் அதிகபட்ச ஸ்கோரை பாகிஸ்தான் இன்று துரத்தி சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பாக 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து நிர்ணயித்த 328 ரன்கள் வெற்றிகரமாக துரத்தியதே சேஸிங் ரெக்கார்டு ஆக இருந்தது. இதனை தற்போது பாகிஸ்தான அணி முறியடித்து இருக்கிறது.