ஐதராபாத் : இந்தியாவில் தங்களுடைய வீரர்கள் கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சதாப்கான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான அணி இந்தியா வந்துள்ளது.
ஹைதராபாத் விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் ஒன்று திரண்டு பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சதாப்கான் ஹைதராபாத் விமான நிலையத்தில் எங்களை வரவேற்பதற்காக பல ரசிகர்கள் திரண்டு இருந்தது எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியும் கொடுத்தது.இந்திய ரசிகர்களின் விருந்தோம்பல் சிறப்பாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் கிடைக்கும் உணவுகள் ருசி வாய்ந்ததாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எல்லாம் எங்களை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார்கள். காரணம் உணவின் சுவை அருமையாக இருப்பதால் நாங்கள் அதிகம் சாப்பிட்டு குண்டாகி விடுவோம் என நினைத்து கவலைப்படுகிறார்கள்.

ஐதராபாத்தில் எங்களுக்கு எந்த மாதிரி அன்பு கிடைத்ததோ அதே அன்பு அகமதாபாத்தில் நாங்கள் இந்தியாவை எதிர்கொள்ளும் போது கிடைக்கும் என நினைக்கிறேன். நாங்கள் இந்த பச்சை ஜெர்சியை அணிந்த உடன் எங்கள் நாட்டு ரசிகர்கள் எங்களிடமிருந்து மிகவும் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நாங்கள் இந்தியாவில் விளையாடுவதால் இந்த தொடரில் யார் நன்றாக செயல்பட்டார்களோ அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆக எங்கள் நாட்டில் மாறிவிடுவார்கள்.
இந்தத் தொடரில் நாங்கள் பல்வேறு மைதானங்களில் விளையாட போகிறோம். ஒவ்வொரு மைதானத்தின் சூழலும் மாறும் என நினைக்கிறேன். அதற்கு தகுந்தார் போல் எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்த ஆசிய கோப்பை எங்களுக்கு நல்ல தொடராக அமையவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் உள்ள நல்ல விஷயமே, நீங்கள் செய்த தவறில் இருந்து உங்களால் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு அணியாக நாங்கள் பல விஷயங்கள் குறித்து கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆசிய கோப்பை முடிந்த பிறகு எங்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் ஓய்வு கிடைத்தது. உங்களுடைய மனது அமைதியாக இருந்தால் தான் உங்களால் நெருக்கடியான கட்டத்தில் நல்ல முடிவு எடுக்க முடியும் என்று சதாப் கான் கூறியுள்ளார்.