மும்பை : ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏழு முறை மோதி இருக்கின்றன.
இந்த ஏழு முறையும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் கூட இந்திய அணி தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில் முதல் வெற்றியை பெறுவதற்காக பாகிஸ்தான் அணியினர் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்கள்.

இரு அணிகளும் வரும் அக்டோபர் 14ஆம் தேதி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் பல பரிட்சை நடத்துகின்றன. இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை ஒருநாள் போட்டிகளில் மோதி இருக்கிறது. இதில் ஒரு ஆட்டம் மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் இம்முறையும் இந்தியாவின் கையே ஓங்கும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மோயின் கானே அந்த அணி வீரர்களை கடுமையாக சாடியிருக்கிறார்.இது குறித்து பேசிய அவர் இந்திய வீரர்களை பார்த்தாலே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள்.
இப்படி பயப்படும் வீரர்களுக்கு நாம் எந்த அறிவுரையை சொன்னாலும் அது எந்த பலனையும் தராது. ஏனென்றால் அதுதான் பயம். ஒரு கிரிக்கெட் வீரராக உங்களுடைய முழு திறமையையும் நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் .அணியின் வெற்றிக்காக நீங்கள் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க வேண்டும். உங்களுடைய அறிவுரை தவறாக முடிந்தால் கூட பரவாயில்லை தொடர்ந்து பங்களியுங்கள்.
ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களின் உடல் மொழியை பார்த்தாலே தெரிந்து விடும். வெற்றிக்காக வீரர்கள் விளையாடுகிறார்கள் என்ற உடல் மொழியை நாம் பார்க்கவே முடியாது என்று மோயின் கான் கடுமையாக பாகிஸ்தான் வீரர்களை விமர்சித்திருக்கிறார். பாகிஸ்தான அணி தங்களுடைய முதல் போட்டியில் நெதர்லாந்தை அக்டோபர் ஆறாம் தேதி எதிர்கொள்கிறது. அதன் பிறகு அக்டோபர் 10 ஆம் தேதி இலங்கையையும் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியாவையும் எதிர்கொள்ள உள்ளது.