அகமதாபாத் : உலகக்கோப்பை தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் பயிற்சி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ் தங்களது சொந்த அணியே கடுமையாக விமர்சித்திருப்பது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியபோது 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் வரும் அக். 14ஆம் தேதி அகமதாபாத்தில் மோத உள்ளது. இது குறித்து பேசிய வக்கார் யூனிஸ், இந்தியா பாகிஸ்தான் போட்டி தான் அனைத்து போட்டிகளுக்குமே முதன்மையானது என்றே சொல்லலாம்.
அதுவும் அகமதாபாத்தில் நீங்கள் விளையாடும் போது பதற்றம் இல்லாமல் விளையாட வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவை விட பாகிஸ்தான் பலம் குன்றிய அணியாக இருக்கும்போது அவர்களும் நெருக்கடியை சந்திப்பார்கள். மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூட இருப்பதால் இந்தியாவுக்குமே அந்த போட்டி நெருக்கடியாக இருக்கும்.
இரு அணிகளின் செயல்பாட்டை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயமாக இந்தியா தான் சிறந்த அணியாக விளங்குகிறது. பாகிஸ்தான் அணியை பற்றி நான் பேச வேண்டும் என்றால் பல பிரச்சனைகள் அணியில் இருக்கிறது. நசீம்சா காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாமல் இருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
ஏனென்றால் ஆட்டத்தில் தொடக்கத்தில் ஷாகின் ஆப்ரிடியும் நசீம் சாவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக நின்று பந்து வீசுவார்கள். தற்போது ஹசன் அலி மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அதிக அளவு அனுபவம் இருப்பது உண்மைதான் என்றாலும் மிகப்பெரிய போட்டியில் அவர் சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியம் கிடையாது. இந்த தொடரில் அனைத்து துறையிலும் பலமாக இருப்பது தற்போது இந்தியா மட்டும்தான். அவர்களிடம் நல்ல சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்களுடைய மாற்று வீரர்களும் பலமாக இருக்கிறது என வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.