ஐசிசி உலககோப்பை அரையிறுதிக்கு செல்வது எப்படி? வெற்றிக்கு எத்தனை புள்ளி? மழையால் ரத்தானால் என்ன ஆகும்
மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடரில் புள்ளிகள் எவ்வாறு வழங்கப்படுகிறது? அரையிறுதிக்கு செல்வது எப்படி என்பது குறித்த பல விவரங்களை காணலாம்.
உலகக் கோப்பை என்றால் ஒரு காலத்தில் குட்டி குட்டி நாடுகள் கூட பெரிய நாடுகளுடன் மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது அனைத்தையும் இந்தியாவின் தலையிட்டின்படி மாற்றப்பட்டது. 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை போட்டிகளில் எல்லாம் 14 நாடுகள் பங்கேற்றன.

இதில் ஏழு அணிகள் இரு பிரிவுகளாக தங்களுக்குள் மோதி அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி கால் இறுதிக்கு செல்லும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உலக கோப்பைக்கு சங்கு ஊதும் வகையில் 2019 ஆம் ஆண்டு வெறும் பத்து அணிகள் மட்டும் தான் இந்த தொடரில் பங்கேற்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையும் அதேபோன்ற ஒரு வடிவத்தில் தான் நடைபெறுகிறது. அதாவது 14 அணிகளுக்கு பதில் 10 அணிகள் தான் இந்த தொடரில் பங்கு பெறும். இந்த 10 அணிகளுமே ஒரே குரூப்பில் தங்களுக்குள் ரவுண்டு ராபின் முறைப்படி மோதும். அந்த வகையில் ஒவ்வொரு அணிக்கும் 9 லீக் ஆட்டங்கள் இருக்கும். இதில் வெற்றி பெற்றால் இரண்டு புள்ளிகளும், தோல்வி அடைந்தால் புள்ளிகள் எதுவும் இல்லை என்ற வகையில் புள்ளி பட்டியல் இடம்பெறும்.
இதில் லீக் சுற்றில் முடிவில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். இதில் முதலாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த அணிகள் முதல் அரை இறுதியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் மோதும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள்.
இப்படி உலகக்கோப்பை போட்டி மிகவும் எளிமையான முறையில் மாற்றப்பட்டாலும் வெறும் பத்து அணிகளை வைத்து உலகக் கோப்பை நடத்தப்படுவது நியாயமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 1992, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்த வடிவத்தில் தான் நடக்கிறது. மேலும் இந்த உலகக் கோப்பையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
இதுவரை எந்த ஒரு போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வரும் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை மீண்டும் பழையபடி 14 அணிகளை வைத்து நடத்த ஐசிசி முடிவெடுத்துள்ளது. எனவே இந்த வடிவத்தில் நடைபெறும் கடைசி உலக கோப்பை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications