மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதன்மூலம் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற இரண்டு வீரர்கள் மட்டும்தான் தற்போது 2023 ஆம் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கரால் அறிவிக்கப்பட்டது. இதில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் வலது கை சுழற் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்ற ஒரு குறை இருந்தது. இதனால் அஸ்வினை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் தமக்கு கிடைத்த வாய்ப்பை அக்சர் பட்டேல் பேட்டிங்கில் சிறப்பாக பயன்படுத்தினாலும் பந்துவீச்சில் பெரிய அளவில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்பு அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அக்ஸர் பட்டேல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. இதில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 2 போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணியில் இருந்த ஒரே குறை நீக்கப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் உலககோப்பை தொடர்கான அணியை இறுதி செய்வதில் இன்று தான் கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் அக்சர் பட்டேல் காயம் இன்னும் குணமடையாததால் அவர் நீக்கப்பட்டு தற்போது தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலககோப்பை இந்திய அணி - 1, ரோகித் சர்மா (கேப்டன்), 2, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), 3, விராட் கோலி, 4, சுப்மன் கில், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, கேஎல் ராகுல், 7, இஷான் கிஷன், 8, சூர்யகுமார் யாதவ், 9, ஜடேஜா, 10, அஸ்வின், 11, ஷர்துல் தாக்கூர், 12, முகமது ஷமி, 13, முகமது சிராஜ், 14, பும்ரா, 15, குல்தீப் யாதவ்