டெல்லி : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி ஏற்கனவே டெல்லியில் வந்து பயிற்சி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் ஒன்று நடக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு இசான் கிஷன் விளையாட இருக்கிறார்.

தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேலும் ஒரு முக்கிய மாற்றம் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடியது. இதற்கு காரணம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது மட்டும்தான். ஆனால் தற்போது டெல்லியில் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் மைதானத்தின் அளவு சென்னை சேப்பாக்கத்தை விட மிகவும் சிறியது ஆகும்.
இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் அதிக ரன்கள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளருக்கு பதிலாக இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து தான் விளையாடும் என தெரிகிறது. இதனால் அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணி சேர்த்துக் கொள்ளும் என தெரிகிறது.
அந்த வகையில் அது முகமது சாமி அல்லது சர்துல் தாக்கூர் ஆகியோராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் சற்று தடுமாறியதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்து விடலாமா என்று பேச்சும் அடிபடுகிறது.
இந்த நிலையில் அஸ்வினை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்துவதற்காக இந்திய அணி நிர்வாகம் அவரை சேர்த்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அஸ்வினுக்கு நீண்ட நாள் வாய்ப்பு கொடுத்தால் தான் அவருடைய முழு திறமையும் வெளியே வரும். ஆனால் அஸ்வினை அங்கொன்றும் இங்கொன்றும் போட்டிக்கு பயன்படுத்தினால் அது அவருடைய உத்வேகத்தை பாதிக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.