மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்த்த அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமே தற்போது மிஞ்சுகிறது.
ஏற்கனவே ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா, இலங்கை அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய நிலையில் தற்போது பயிற்சி ஆட்டத்தில் 345 ரன்கள் குவித்தும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கை நியூசிலாந்து அணி 44 ஓவர்களில் எல்லாம் எட்டியது. மேலும் அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி களமிறங்கவில்லை என்றாலும் ஹரிஷ் ரவுப் பந்துவீச்சு எடுபடவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானை கடுமையாக சாடி இருக்கிறார்.
அதில், இது ஒரு பயிற்சி ஆட்டம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் வெற்றி என்பது வெற்றி தான் உங்களுக்கு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது பாகிஸ்தான் அணி தோல்வி அடைவதையே ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
முதலில் அவர்கள் ஆசிய கோப்பை போட்டியில் தோல்வியை தழுவினார்கள். தற்போது இங்கும் தோற்று இருக்கிறார்கள். அதுவும் 345 ரன்கள் அடித்தும் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். நியூசிலாந்து அணி சிறப்பாக சேஸிங் ரன்களை செய்திருக்கிறது. இதுபோன்ற ஆடுகளங்களில் தான் நீங்கள் விளையாட போகிறீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் 400 ரன்களுக்கு மேல் அடித்தால் தான் உங்களால் வெற்றி பெற முடியும்.
ஏனென்றால் உங்களுடைய பந்துவீச்சு முன்பு போல் இல்லை. இந்தியாவில் உங்களுக்கு இது போன்ற ஆடுகளம் தான் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். பாகிஸ்தான அணி தங்களுடைய யுத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும் ரிஸ்க் எடுத்து பழகிக் கொள்ளுங்கள். முதல் 10, 15 ஓவர்களில் பொறுமையாக விளையாடி விட்டு பிறகு வேகமாக ரன்களை சேர்ப்பது தற்போது ஒத்து வராது என்று ரமீஸ் ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.