லக்னோ : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் இலங்கை அணியும் லக்னோவில் பலப்பரிட்சை நடத்தினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிஷாங்கா மற்றும் குஷல் பெரேரா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 125 ரன்கள் சேர்த்தது.இதனால் இலங்கை இம்முறை 300 ரன்கள் குவிக்கும் என்றும் இதனை துரத்த ஆஸ்திரேலியா தடுமாறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சிறப்பாக விளையாடிய நிஷாங்கா உலகக்கோப்பை போட்டியில் தன்னுடைய இரண்டாவது அரை சதத்தை கடந்தார். 67 பந்துகளை எதிர்கொண்ட அவர் 61 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான குசல் பெரேரா 82 பந்துகளை எதிர் கொண்டு 78 ரன்கள் சேர்த்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இலங்கை அணி வீரர்கள் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர்.
குறிப்பாக இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக களம் இறங்கிய குஷல் மெண்டிஸ் 9 ரன்களிலும் சமர விக்கிரமா 8 ரன்களிலும் தனஞ்செய் டி செல்வா 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நடு வரிசையில் அசலங்கா மட்டும் போராடி 25 ரன்கள் சேர்க்க அதன் பிறகு களம் இறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கம் ரன்களை சேர்த்தார்கள். மற்ற ஏழு வீரர்களுமே ஒற்றை இலக்கம் ரன்களில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது.
157 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி அடுத்த 52 ரன்களை சேர்ப்பதற்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து பேட்டிங்கில் சொதப்பியது.ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் ஆடம் சம்பா நான்கு விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் ஸ்டார்க் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.