மும்பை : ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகளை பெறுவதற்கான வழிமுறைகளை ஐசிசி அறிவித்து இருக்கிறது.
அதன்படி உலகக்கோப்பை தொடரை நேரடியாக மைதானத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் ஆசையாகும். இந்த நிலையில் டிக்கெட்டை எப்படி வாங்குவது எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி WWW.icc-cricket.com என்ற இணையதளத்தில் சென்று அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிக்கெட் வாங்குவதற்காக முதலில் நமது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்தியா பங்கேற்காத பயிற்சி போட்டிக்கான டிக்கெட்டுகளை அன்றைய தினம் இணையதளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம். இதுபோன்று ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்தியா விளையாடும் இரண்டு பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
இதை அடுத்து ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னை, டெல்லி மற்றும் புனேவில் இந்தியா விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதை போன்று செப்டம்பர் ஒன்றாம் தேதி தர்மசாலா லக்னோ மற்றும் மும்பையில் இந்தியா பங்கேற்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். செப்டம்பர் இரண்டாம் தேதி பெங்களூரு கொல்கத்தாவில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இணையத்தளம் மூலம் வாங்கி கொள்ளலாம்.

செப்டம்பர் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் இந்தியா பங்கேற்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினம் தான் இந்தியா பாகிஸ்தானிற்கான டிக்கெட் கிடைக்கும். செப்டம்பர் 15ஆம் தேதி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கான டிக்கெட் விற்கப்படும். இணையதளம் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் ரசீதை நேரடியாக சென்று தான் பெற வேண்டும்.
டிக்கெட்டுக்கான ரசீது இருந்தால் மட்டுமே ரசிகர்களால் மைதானத்திற்குள் நுழைய முடியும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து ரசிகர்களும் ஒரே நாளில் இணையத்தில் டிக்கெட் புக் செய்தால் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்படும் என்பதற்காக இப்படி ஐசிசி ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு நாள் என முன்பதிவை பிரித்து வழங்கியிருக்கிறது.