மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு எந்த அணி செல்லும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
அனைத்து அணிகளும் பெரும்பான்மையாக 6 போட்டிகளில் விளையாடி விட்டன. இந்த நிலையில் இன்னும் சில போட்டிகள் எஞ்சி இருப்பதால் சில அணிகளுக்கு அரை இறுதிச் சுற்று வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த உலகக் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்த பாகிஸ்தான் அணி தற்போது ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி நான்கு தோல்வி என மொத்தம் நான்கு புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அரை இறுதிச்சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இனி வரும் போட்டிகளில் யார் வென்றால் அது நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
முதலில் அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்ல வேண்டுமென்றால் இனி விளையாடப் போகும் மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும். இனி இந்தியா விளையாட போகும் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெல்ல வேண்டும். இதேபோன்று நியூசிலாந்து அணி விளையாடப் போகும் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து தோற்க வேண்டும். தென்னாப்பிரிக்கா விளையாடப் போகும் அனைத்து போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வெற்றி பெற வேண்டும்.
இதைத் தவிர இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கையும், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற வேண்டும். இது நடந்தால் பாகிஸ்தான் அணி 10 புள்ளிகள் பெற்று அரையிறுதியில் நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் நியூசிலாந்து அணி இனி விளையாட போகும் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோற்க வேண்டும். அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.