மும்பை : ஐசிசி உலக கோப்பை தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கியுள்ள நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலககோப்பை தொடரை யார் வெல்வார்கள் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் உலகக்கோப்பை அரை இறுதிக்கு யார் செல்வார்கள் என்று கேட்கிறீர்கள். அனைவரும் நான்கு அணிகளை தான் சொல்வார்கள் நான் ஐந்து அணிகளை குறிப்பிடுகிறேன்.

ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் ஏதேனும் ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் எப்போதுமே ரசிகர்களுக்கு காத்திருக்கும். அந்த வகையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் கண்டிப்பாக அரை இறுதிச்சுற்றுக்கு சென்று விடும். இதனை தொடர்ந்து நியூசிலாந்து இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என் உள் மனது தென்னாப்பிரிக்காதான் இம்முறை உலக கோப்பையை வெல்லும் என்று சொல்கிறது.
ஏனென்றால் அவர்கள் இது வரை வெள்ளை நிற கிரிக்கெட்டில் எந்த பெரிய கோப்பையும் வெல்லவில்லை. எனவே இந்த தொடர் அவர்களுக்கு சரியான வாய்ப்பாக அமையலாம். இந்த உலகக்கோப்பை தொடரில் பல ஆல்ரவுண்டர்கள் ஒவ்வொரு அணியிலும் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் மிச்சல் மார்ஸ் இந்தியாவில் ஜடேஜா இங்கிலாந்தில் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் என்றால் அது பென் ஸ்டோக்ஸ் தான். உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அவரை அழைத்து வந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறை இந்திய அணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்காக உலக கோப்பையை வென்றே ஆக வேண்டும். ஏனென்றால் இந்த இரு வீரரும் அடுத்த உலக கோப்பையில் விளையாடுவார்களா என்பது சந்தேகமே.
எனக்கும் சச்சினுக்கும் உள்ள உறவு என்பது மிகவும் ஸ்பெஷல் ஆனது. இதனால் எப்படியாவது சச்சினுக்காக உலக கோப்பையை வென்று தரவேண்டும் என்பதற்காக என் உயிரை கொடுத்து விளையாடினேன். தற்போது இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு மேல் உலக கோப்பையை வெல்லவில்லை. இதனால் நிச்சயம் கடும் நெருக்கடி ஏற்படும். இந்த நெருக்கடியை இந்திய அணி வீரர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.