லக்னோ : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முக்கியமான ஆட்டம் தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் ஆட்டத்தை வார நாட்களில் ஐசிசி நடத்துவதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் உலகக்கோப்பை என்ற ஒரு அற்புதமான தொடரை பிசிசிஐ கெடுத்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர் .

குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற வார இறுதிகளில் பெரிய அணிகள் மோதும் போது பெரும்பாலான ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை வீட்டிலிருந்தும் மைதானங்களில் இருந்தும் பார்ப்பார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியை வார இறுதியில் வைக்காமல் வார நாட்களில் வைத்திருப்பதால் ரசிகர்களால் இந்த போட்டியை பார்க்க முடியவில்லை.
மேலும் மைதானத்திலும் கூட்டம் இல்லாமல் இந்த போட்டி எந்த ஒரு ஆரவாரமும் இன்றி நடைபெற்று வருகிறது. இதுவே இந்த போட்டி சென்னையிலோ இல்லை மும்பை, கொல்கத்தாவிலோ நடந்திருந்தால் ரசிகர்கள் இதுபோன்ற போட்டியை ஆரவாரத்துடன் பார்த்திருப்பார்கள். அட்டவணையை சரியாக தயார் செய்யாமல் பிசிசிஐ கோட்டை விட்டு இருப்பதே இதற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக ஆஸ்திரேலியா,தென் ஆப்பிரிக்கா மோதும் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அனைவருமே பார்க்கும் நாளாக கருதப்படும் அங்கு இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் மோதுகிறது. இதேபோன்று மீண்டும் வரும் திங்கட்கிழமை 16ஆம் தேதி ஆஸ்திரேலியா இலங்கை என்ற பலம் வாய்ந்த அணிகள் மோதுகிறது.
இப்படி அட்டவணையில் பல சொதப்பல்களை பிசிசிஐ செய்திருப்பதால் இந்த உலகக் கோப்பை தோல்வியில் முடிவடைய வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேல் பொய் பிசிசிஐ செயலாளர் பதவியில் இருந்து ஜெய்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.