மும்பை : ஐசிசி உலகக் கோப்பையை ஆறாவது முறையாக வென்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் பாராட்டும் வகையில் சந்தேகத்தை தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 240 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அந்த இலக்கை எளிதில் எட்டினர். இந்த நிலையில் போட்டிக்கு பயன்படுத்திய ஆடுகளத்தால் தான் இந்தியா தோல்வியை தழுவி இருப்பதாக ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், இறுதிப் போட்டியில் மோசமான ஆடுகளத்தை ஏற்படுத்திய பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இறுதிப் போட்டிக்கு இந்தியா ஒரு நல்ல ஆடுகளத்தை தயார் படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய ஆடுகளம் மிகவும் மோசமாக இருக்கிறது.
ஆடுகளத்தில் பந்தின் பவுன்சும் வேகமும் இருக்க வேண்டும். ஆனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பிசிசிஐ மெதுவான ஆடுகளத்தை போட்டு விட்டது. இதனால் தான் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. இந்தியாவின் செயல்பாடு எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதே சமயம் ஆஸ்திரேலியா அணி எப்படி தொடர்ந்து உலக கோப்பையை வென்று வருகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர்களை பாராட்டும் வகையில் ஒரு குட்டை சோயிப் அக்தர் வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து பேசிய சோயிப் அக்தர், இந்தியா உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதற்கு அதிர்ஷ்டம் காரணம் இல்லை என்றும் அவர்கள் 10 போட்டிகள் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதை யாரும் மறக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சோயிப் அக்தரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். பிசிசிஐயின் தவறான முடிவால் தான் இந்தியா தோல்வியை தழுவி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.