மும்பை : ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்வதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஒரு வினோத ஐடியாவை கொடுத்து இருக்கிறார்.
2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலக கோப்பை தொடர்க்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.இந்த நிலையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இதில் ஒரு இந்திய வீரராக எப்படி இருப்பது என்பது குறித்து சத்தியமாக எனக்கு தெரியாது. ஏனென்றால் இந்தியாவில் இந்திய வீரர்கள் விளையாடுவது எப்போதுமே சவாலானதாக இருக்கும்.
கடும் எதிர்பார்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும். ஒருவேளை நான் ஒரு இந்திய கிரிக்கெட்டில் முக்கிய நிர்வாகியாக இருந்தால் நிச்சயமாக சச்சின், தோனி போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வருவேன். அவர்களின் அனுபவத்தை இளம் வீரர்களுக்கு வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன்.
யுவராஜ் சிங் போன்ற வீரரையும் அணிக்குள் கொண்டு வந்து அவருடைய அனுபவத்தை கூற சொல்வேன். ஏனென்றால் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களைக் கடந்து அந்த போட்டிகளில் விளையாடினார். இதனால் உங்கள் மனதில் பட்டதை வீரர்களுக்கு சொல்லுங்கள் என்று வெளிப்படையாக பேச வைப்பேன்.
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் விராட் கோலி இருந்தார்.
ஆனால் அப்போது அணியில் அவர் சாதாரண வீரராக தான் இருந்தார். எனினும் சொந்த மண்ணில் உலகக் கோப்பை விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. மேலும் அந்த சமயத்தில் ஒரு அணியாக என்ன செய்தீர்கள் என்பதை விராட் கோலி போன்ற வீரர்கள் தற்போது உள்ள இளம் வீரர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். நீங்கள் அணிக்கு வெளியே இருக்கும் தேவையற்ற சத்தங்களை அமைதியாக்கினாலே நீங்கள் களத்தில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவீர்கள் என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.