லக்னோ : ஐசிசி உலக கோப்பையில் 29 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தோல்வியை சந்திக்காத இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். இது குறித்து பேசிய அவர் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம்.

இதற்குப் பின்னால் எந்த காரணமும் கிடையாது. என் உள்ளுணர்வு படி நான் இதை செய்கிறேன். இது எங்களுக்கு ஒரு நல்ல தருணம். இன்றைய போட்டியிலாவது எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். இங்கு வந்திருக்க ரசிகர்களுக்காக ஒரு நல்ல கிரிக்கெட் போட்டியை நாம் விளையாட வேண்டும். எங்கள் திறமைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் நாங்கள் இந்த தொடரில் கொஞ்சம் கூட விளையாடவில்லை.
ஆனால் இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய இழந்த பெருமையை மீட்பதற்காக நாங்கள் விளையாடுகிறோம். இந்தியாவுக்கு எதிராக இவ்வளவு பெரிய மக்கள் முன் விளையாடுவது உண்மையிலே மகிழ்ச்சியான தருணம் தான். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜாஸ் பட்லர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம்.
ஏனென்றால் இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் இரண்டாவதாக தான் நாங்கள் பேட்டிங் செய்தோம். இது நல்ல ஆடுகளமாக தெரிகிறது. 100 ஓவர் முழுவதும் எந்த மாற்றமும் இல்லாமல் இங்கு போட்டிகள் நடந்தது. எங்களுக்கு இரண்டு புள்ளிகள் முக்கியம்தான் என்றாலும் நாங்கள் சில விஷயங்களை மாற்றி செய்ய விரும்புகிறோம். ஒரு வாரம் ஓய்வுக்கு பிறகு திரும்பி கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம். இந்த ஓய்வு எங்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்ன சரியாக செய்தோம் என்பது குறித்து யோசித்தோம். கிரிக்கெட் குறித்து நிறைய பேசினோம். நாங்கள் எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதை வீரர்களை வைத்துதான் இன்றைய போட்டியிலும் விளையாடுகிறோம் என ரோகித் சர்மா கூறினார்.