அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பறிபோனது. இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் இந்திய அணி வீரர்கள் 350 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா 240 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் அபாரமாக விளையாடி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன் மூலம் இந்திய அணி உலக கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனை அடுத்து ரசிகர்கள் தற்போது சோகத்தை ஆழ்ந்துள்ளனர். இந்திய அணியின் தங்க மகன் தோனி இல்லாமல் இந்தியா இனி உலக கோப்பையே வெல்லாதா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர். மேலும் தோனி தான் கடைசியாக உலகக்கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்ததாகவும், அதன் பிறகு இந்தியா பலமுறை இறுதி போட்டிக்கு சென்றும் ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடிய வில்லை என்றும் இனி தோனியே பிறந்து வந்தால் தான் இந்தியாவுக்கு ஐசிசி கோப்பை கிடைக்குமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகின்றனர்.
மேலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எப்படி தோனி கேப்டனாக வீழ்த்தினார். ஏன் மற்ற கேப்டன்களால் அது செய்ய முடியவில்லை? தோனிக்கு மட்டும் எப்படி அந்த பவர் இருக்கிறது என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். தோனி ஐபிஎல் தொடரில் விளையாடும் நிலையில் அவர் ஏன் இந்திய அணிக்காக இன்னும் கொஞ்ச நாள் விளையாடக் கூடாது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை முதல்முறையாக வென்று 28 ஆண்டுகள் கழித்து தான் தோனி இரண்டாவது முறையாக கோப்பை வென்று தந்தார். இதனால் மீண்டும் உலக கோப்பையை இந்தியா வெல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.