அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் அஹமதாபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதல் போட்டியில் கடந்த முறை பைனல் வரை வந்த இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் இன்று பல பரிட்சை நடத்துகிறது.
இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை காண 40 ஆயிரம் பெண்களுக்கு இலவச டிக்கெட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் தொடக்க விழா ஏதும் நடத்தப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் உலகக்கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்து அதிரடி சரவெடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் மைதானம் ரன் குவிப்புக்கு ஏற்ற ஆடுகளம் ஆகும். மேலும் சுழற் பந்துவீச்சு வேகப்பந்து வீச்சு என இரண்டுமே சரிசம அளவில் இருக்கும். பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் இருவருமே தங்களுடைய திறமையை பயன்படுத்தினால் நிச்சயம் இங்கு சாதிக்க முடியும்.
இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவது சந்தேகமாக இருக்கிறது. இதேபோன்று நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என தெரிகிறது. இரு அணியிலுமே ஸ்டார் வீரர்கள் இல்லாத நிலையில் மற்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
கடைசியாக இரு அணிகளும் மோதிய நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இதனை அடுத்து நியூசிலாந்து அணி வங்கதேசத்துடன் மூன்று ஒரு நாள் போட்டிகளில் மோதி அதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. மேலும் பயிற்சி ஆட்டத்தில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று இருக்கிறது.
இதனிடையே 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதே அகமதாபாத்தில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் முதல் போட்டியில் மோதி இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது 96 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போல் மீண்டும் அதே மாதிரி தொடங்குவதால் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதியில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.