ஐதராபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்.வேட்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டிலிருந்து இங்கு நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி தான் வெற்றியை பெற்று இருக்கிறது.

இந்த வகையில் ஸ்காட் எட்வார்ட்ஸ் தவறான முடிவை எடுத்து விட்டதாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து பேசிய நெதர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸ் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது களம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். மேலும் எங்களது அணியில் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவர்கள் பாகிஸ்தானை கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புவதாக கூறினார்.
ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் எவ்வாறு விளையாட போகிறோம் என்பதை முக்கியம் என்றும் ஸ்காட் எட்வார்ட்ஸ் கூறினார். இம்முறை எத்தனை பெரிய அணிகளை வீழ்த்தப் போகிறீர்கள் என கிரிக்கெட் வர்ணனையாளர் ரமீஷ் ராஜா கேட்க, அதுக்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். வெற்றி பெறுவோம் என பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிப்பார்கள் என நான் நம்புகிறேன். எங்களுடைய தொடக்க வீரர்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஹசன் அலிக்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்.
முதலில் பேட்டிங் செய்வதால் 290 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று பாபர் அசாம் கூறினார். இதனை அடுத்து இந்தியா உங்களை எவ்வாறு பார்த்துக் கொள்கிறது என்று ரமீஷ் ராஜா கேட்க அதற்கு பதில் அளித்த பாபர் அசாம் நாங்கள் மிகவும் உற்சாகமாக இந்தியாவில் இருக்கின்றோம். எங்களுக்கு சகல வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று பாபர் அசாம் பாராட்டினார்.