ஐதராபாத் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் விளையாடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் நட்சத்திர அந்தஸ்துடைய பேட்ஸ்மேன் என்றால் அது பாபர் அசாம் தான் ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் குறைந்தது மூன்று முதல் நான்கு சதம் அடிப்பார் என கம்பீர் வாய் வைத்தார். கம்பீர் ஒரு விஷயத்தை பாராட்டினாலே அந்த விஷயம் அத்துடன் முடிந்து விடும் என்பது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். அந்த வகையில் பயிற்சி ஆட்டத்தில் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
நியூசிலாந்துக்கு எதிராக 80 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 ரன்கள் என பட்டையை கிளப்பிய பாபர் அசாம், நெதர்லாந்து அணிக்கு எதிராக இன்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பாபர் அசாம் விளையாடும் முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் பாபர் அசாம் எப்படி விளையாட போகிறார் என எதிர்பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.
தொடக்க வீரராக களமிறங்கிய பக்கர் சமான் 12 ரன்களிலும் இமாம் உல் ஹக் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 18 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 5 ரன்களில் வெளியேறினார். இதில் ஒரு பவுண்டரி கூட இடம்பெறவில்லை. இதனை அடுத்து 38 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.

இதனை அடுத்து முகமது ரிஸ்வான் சவுத் சக்கிலும் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணியை மீட்டு வருகின்றனர். பாபர் அசாம் கேப்டனாக இருப்பதால் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.