மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. நேற்று நடைபெற்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் டி எல் எஸ் முறைப்படி வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்து தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை மட்டும் தான் எதிர் கொள்ள வேண்டும். இதில் அவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள் என்பதால் அவர்களும் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். இதனை அடுத்து நான்காவது இடத்திற்கு தான் தற்போது போட்டியே நிலவுகிறது. இதில் 8 புள்ளிகள் உடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன.
இதில் ஆப்கானிஸ்தான் அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் அவர்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகும். குறைந்தபட்சம் அவர்கள் ஒரு போட்டியில் தோற்றால் கூட அது பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும். இந்த நிலையில் நியூசிலாந்து அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சாதகமாக மாறிவிடும்.
ஒருவேளை இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி தங்களுடைய கடைசி போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். ஆனால் நியூசிலாந்தும் இலங்கையும் மோதும் ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறுகிறது. அன்றைய தினம் மழை குறுக்கிடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போட்டி ரத்தாகும் நிலையில் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினாலே அரை இறுதி சுற்றுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.