மும்பை : ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தனர். இதில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக சதம் விளாசினர்.

இதை அடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் அதிரடியாக விளையாடியது. ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் அவ்வளவுதான் என இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், முகமது சமி வீசிய ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது. இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மா எவ்வாறு காய் நகர்த்தி இந்தியாவை வெற்றி பெற வைத்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.
நாக்கவுட் போட்டிகளில் எப்போதுமே பெரிய இலக்கை நிர்ணயித்தால் அதனை சேசிங் செய்வது கடினம் என்பதை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் தேர்வு செய்து மட்டும் அல்லாமல் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என முடிவு செய்த ரோகித் சர்மா நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்.
கேப்டனே இப்படி விளையாடினால் மற்ற வீரர்களும் அதே போல் தானே ஆட வேண்டும். இதனால் ரோஹித்தை பின்தொடர்ந்து கில்லும் அதிரடியை காட்டினார். ஒரு கட்டத்தில் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக கில் தடுமாறுவதை கண்ட ரோகித் சர்மா, அவரை ரிட்டையர்ட் ஹர்ட் ஆக கூறி அஸ்வினை தூது அனுப்பினார். அப்போது களத்திற்கு வந்த ஸ்ரேயாஸ் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தார்.
விராட் கோலி வழக்கம் போல் ஆங்கர் ரோல் செய்ய இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து முதல் சில ஓவர்களில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களை இந்தியா வீழ்த்தினாலும் அதன் பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் டேரல் மிச்சல் ஜோடி அபாரமாக ரன்கள் சேர்த்தது. எப்போதுமே சில கேப்டன்கள் தங்களுடைய சிறந்த பவுலர்களை கடைசி நேரத்தில் தான் பயன்படுத்துவார்கள்.
ஆனால் ரோகித் சர்மா இந்த கட்டத்தில் விக்கெட்டுகள் எடுத்தால் தான் உண்டு என்பதை உணர்ந்து முகமது சமியை தொடர்ந்து பந்து வீச வைத்தார். அதன் காரணமாக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தது. அதன் மூலம் இந்தியாவின் வெற்றி கதவு திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குல்திப் யாதவ், பும்ரா என மூன்று வீரர்களையும் மாற்றி பவுலிங் ரோகித் சர்மா பயன்படுத்தினார்.
இதனால் ஒரு ஓவருக்கு 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இடத்தில் நியூசிலாந்து அணி 8 மற்றும் 9 ரன்கள் தான் எடுத்தது. இதனால் நெருக்கடி அதிகமாகி அடுத்தடுத்து விக்கெட்டுகளும் விழுந்தது. இதனால் நியூசிலாந்து அணி 327 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்த தொடர் முதல்முறையாக இந்திய அணி நெருக்கடிக்கு ஆளானது. எனினும் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் வெற்றி பெற முடியும் என்று யுத்தியில் விளையாடியதால் வெற்றி சாத்தியமாயிற்று.