ஐதராபாத் : 7 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்கள். இதில் பெரும்பாலான வீரர்கள் தற்போது முதல் முறையாக இந்தியாவில் விளையாடுகிறார்கள்.
இந்த உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி நாளை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சதாப்கான் பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். இது இந்திய அணியில் பந்து வீச எந்த வீரருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சதாப் கான் ரோகித் சர்மாவுக்கு தான் பந்து வீசுவது மிகவும் கடினம் என பளிச்சென பதில் அளித்தார்.
ரோகித் சர்மாவை நான் மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். ஏனென்றால் தற்போதைய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தான் மிக பயங்கரமான பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். அவருக்கு பந்து வீசுவது என்பது மிகவும் கடினம். அவர் நிலைத்து நின்று விட்டால் எதிரணிக்கு நிச்சயம் அது அபாயகரமான போட்டியாக மாறிவிடும்.
இதேபோன்று பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவை எதிர்கொள்வது கடினம் என நான் கூறுவேன். ஏனென்றால் என்னை போல அவரும் ஒரு லெக் ஸ்பின்னர். எங்கள் அணியில் பாபர், ரிஸ்வான் இமாம் உல் ஹக் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் நன்றாக விளையாடுவார்கள் என நான் நினைக்கிறேன். இந்த உலக கோப்பையில் எந்த அணி சிறப்பாக பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும்.
ஏனென்றால் ஆடுகளத்தை பார்க்கும்போது பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என தெரிந்துவிட்டது. பவுண்டரி தூரமும் மிகவும் குறைவாக இருக்கிறது .எங்களது அணியில் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தினாலே நிச்சயம் எங்களால் சாம்பியன்களாக முடியும் என சதாப்கான் கூறியுள்ளார்.