ஐசிசி உலககோப்பை மாற்றத்திற்கு அஸ்வின் வரவேற்பு.. ஆனால், இதை மறக்க கூடாது என கருத்து
மும்பை: ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் வடிவத்தை மாற்றியமைக்க ஐசிசி எடுத்துள்ள முடிவுக்கு இந்திய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் போட்டிகளின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்று கூறியுள்ள அவர், அதே வேளையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளுக்கு முன்னணி அணிகளுடன் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகளை வழங்கி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்னும் கூடுதல் உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, போட்டித்தன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில், 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இனி மூன்று கட்டங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும், 2028 டி20 உலகக் கோப்பையின் 'சூப்பர் 8' சுற்று 'சூப்பர் 10' சுற்றாக விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் சரியான திசையை நோக்கிய ஒரு படி என்று குறிப்பிட்ட அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டை உலகளவில் கொண்டு சேர்ப்பதற்கு வளர்ந்து வரும் அணிகளுக்கான கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், "2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2028 டி20 உலகக் கோப்பைக்கான போட்டி வடிவத்தில் ஐசிசி செய்துள்ள மாற்றங்கள் போட்டித்தன்மையின் அடிப்படையில் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. ஆனால், விளையாட்டை உலகளவில் வளர்ப்பதே இறுதி இலக்காக இருந்தால், வளர்ந்து வரும் நாடுகளுக்கு இன்னும் வலுவான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்."
"நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நேபாளம், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து போன்ற அணிகளுக்கு வெறும் தகுதிச் சுற்று போட்டிகள் மட்டும் போதாது. அவர்களுக்கு இன்னும் அர்த்தமுள்ள போட்டிகள் தேவை உதாரணமாக: ஒவ்வொரு இருதரப்பு தொடரிலும் மூன்றாவது அணியாக இவர்களைச் சேர்ப்பது போன்ற முடிவுகள் நல்ல பலன் தரும். இந்த வளர்ச்சி மட்டுமே ஒலிம்பிக்கிலும் இந்த விளையாட்டை ஒரு சிறந்த பொழுதுபோக்காக மாற்ற உதவும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று அவர் விரிவாகப் பதிவிட்டுள்ளார்.
அஸ்வினின் இந்தக் கருத்துக்கள், தங்களுக்கு அதிக போட்டிகள் வேண்டும் என்று அசோசியேட் நாடுகள் நீண்டகாலமாகக் கேட்டு வரும் கோரிக்கையை எதிரொலிப்பதாக அமைந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நேபாளம், ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததோடு, சர்வதேச அரங்கில் தங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பையில், திட்டமிட்டபடி 14 அணிகள் பங்கேற்கும். ஆனால் கடந்த முறை 10 அணிகள் மட்டுமே பங்கேற்றன. போட்டியை மேலும் விறுவிறுப்பாக மாற்றும் வகையில், குரூப் சுற்றுக்கு முன்னதாக 'சூப்பர் சீரிஸ்' சுற்றையும், அரையிறுதிக்கு முன்னதாக 'சூப்பர் 7' சுற்றையும் ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

