ஐதராபாத் : பாகிஸ்தான் என்றாலே வேகப்பந்து வீச்சு என்ற இருந்த காலம் போய் தற்போது தொடர்ந்து பேட்ஸ்மேன்களிடம் அடிவாங்கும் நிலை அந்த அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.
உலகின் நம்பர் ஒன் அணியாக ஒரு வாரத்திற்கு முன்பு வரை இருந்த பாகிஸ்தான் அணியை தற்போது முட்டு சந்தில் வடிவேலுவை குமுறுவது போல் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் தற்போது குமுறி எடுத்திருக்கிறது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் மோசமான நிலையில் இருப்பது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர், அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 33 பந்தில் 48 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதேபோன்று மிச்சல் மார்ஸ் 31 ரன்களும், ஸ்மித் 27 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். மார்னஸ் லாபஷன் 31 பந்தில் 40 ரன்கள் சேர்க்க, அலெக்ஸ் கெரி 11 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து நடு வரிசையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சில் கதகளி ஆடினார்கள்.
குறிப்பாக அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 6 சிக்சர்கள் நான்கு பவுண்டரிகள் விளாசி 77 ரன்கள் குவித்தார். இதேபோன்று ஆல்ரவுண்டர் கேமரன் கிரீன் 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதே போன்று ஜோஸ் இங்கிலீஷ் 30 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது. இதில் பாகிஸ்தான அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஹரிஷ் ரவுஃப் ஒன்பது ஓவரில் 97 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திருக்கிறார்.
இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் சதாப்கான் 10 ஓவர்களில் 69 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் ஷாகின் அப்ரிடி ஆறு ஓவரில் 25 ரன்களையும் ஹசன் அலி ஆறு ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்கள். ஒரே வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிரணிக்கு பாகிஸ்தான் அணி 340 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.