ஹைதராபாத் : பாகிஸ்தான் அணி தங்களின் பலம் என எதை நினைத்துக் கொண்டு இருக்கிறதோ அதை தகர்த்து எறிந்து இருக்கிறது நியூசிலாந்து அணி.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டிகள் நடக்கத் துவங்கி விட்டன. இதில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன பயிற்சிப் போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்தப் போட்டியில் தான் பாகிஸ்தான் அணி பலமாக கருதிக் கொண்டு இருக்கும் பந்துவீச்சை நியூசிலாந்து அடித்து நொறுக்கி இருக்கிறது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. துவக்க வீரர்கள் ஷபிக், இமாம் உல் ஹக் ஏமாற்றினாலும், பாபர் அசாம் 80 ரன்கள் குவித்தும், முகமது ரிஸ்வான் 103 ரன்கள் குவித்தும் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர்.
சவுது ஷகீல் அதிரடியாக 53 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். ஆகா சல்மான் 33, ஷதாப் கான் 16 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தது பாகிஸ்தான். அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பந்து வீசினர்.
ஆனால், யார் பந்து வீசினாலும் அடித்து துவம்சம் செய்தது நியூசிலாந்து. அந்த அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 97 ரன்கள் சேர்த்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து பின் மற்ற வீரர்கள் பேட்டிங் செய்யும் வகையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். டேரில் மிட்செல் 59 ரன்கள் குவித்து அவரும் அடுத்த வீரர்களுக்கு வழி விட்டு சென்றார்.
இறுதியில் மார்க் சாப்மேன் நின்று ஆடி 41 பந்துகளில் 65 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் ஹாரிஸ் ரௌப் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தும், ஹசன் அலி 7.4 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்தும், முகமது வாசிம் 7 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தும் ஏமாற்றம் அளித்தனர்.
சுழற் பந்துவீச்சாளர்கள் ஆகா சல்மான், உசாமா மிர், முகமது நவாஸ் ஆகியோரும் சொல்லிக் கொள்ளும்படி பந்து வீசவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சை தான் தன் பலம் என நினைத்து வந்தது. ஆனால், அதுவே அந்த அணியின் பலவீனம் என சம்மட்டி அடி கொடுத்து தெளிய வைத்துள்ளது நியூசிலாந்து அணி. இனியாவது பாகிஸ்தான் அணி தங்கள் பந்துவீச்சின் பலம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப போட்டிகளில் திட்டங்களை வகுக்க வேண்டும்.
அந்த போட்டியில் ஷஹீன் அப்ரிடி இப்படி வீசினார், இந்தப் போட்டியில் ஹாரிஸ் ரௌப் அப்படி வீசினார் என பழைய பெருமைகளை பேசிக் கொண்டே இருந்தால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் அரையிறுதி போவதே சந்தேகம்தான்.
சமீபத்தில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு சம்பளத்தை வேறு உயர்த்திக் கொடுத்துள்ளது. அதை மனதில் வைத்தாவது பாகிஸ்தான் வீரர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். எதிரணிக்கு ஏற்ப திட்டமிட வேண்டும். இல்லையெனில் ஆசிய கோப்பையில் இலங்கை அணியிடம் தோற்றது போலத் தான் உலகக்கோப்பையிலும் நடக்கும்.