டெல்லி: உலக கோப்பை டி20 போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. தற்போது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் திங்கள்கிழமை இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

ஏற்கனவே இந்த இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நிலையில் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் சண்டிமால்(21), தில்ஷன் (36) அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்கள். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் அந்த அணி
19.3 ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், கைல் அபாட், ஆரோன் பாங்கிசோ, பெகர்டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்து 2 பவுண்டரிகளை அடித்த டி காக், 9 ரன்களில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து, ஆம்லாவும், டு பிளசிஸ்சும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொண்டனர்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. 75 ரன்கள் எடுத்திருந்த போது, டு பிளஸ்சிஸ் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டி வில்லியர்ஸ் - ஆம்லா ஜோடி சிறப்பான ஆட்டத்தால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் 17.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஆம்லா 52 பந்துகளில் 56 ரன்களையும், டி வில்லியர்ஸ் 12 பந்துகளில் 20 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுக்களை வீழத்திய தென் ஆப்பிரிக்க வீரர் பான்கிசோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
உலக கோப்பை டி20 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. ஏற்கனவே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த அணிகளுக்கான போட்டி மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.