லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா தனது முதல் ஐசிசி கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இந்த எதிர்பாராத தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற பின்னரும், இரண்டாவது இன்னிங்ஸில் தங்கள் அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்றும், எய்டன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமாவின் அதிரடி ஆட்டம் தங்களுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை என்றும் அவர் புலம்பினார். கம்மின்ஸ் என்ன சொன்னார்? இந்தப் போட்டியில் என்ன நடந்தது? என்று சுருக்கமாக பார்க்கலாம்.

இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலளித்த தென்னாப்பிரிக்கா 138 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 207 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை தென்னாப்பிரிக்கா எட்டுவது கடினம் என பலரும் நினைத்த நிலையில், அந்த அணி அபாரமாக ஆடியது. எய்டன் மார்க்ரம் சதம் விளாச, டெம்பா பவுமா அரை சதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில், தென்னாப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய பேட் கம்மின்ஸ், "சில விஷயங்கள் வேகமாக மாறிவிடுகின்றன. நாங்கள் இந்தப் போட்டியில் சில விஷயங்களை சரியாக செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலையைப் பெற்றோம். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நான்காவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா எங்களுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை." என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
மேலும் அவர், "எங்கள் அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்களிடம் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் நன்றாகவே விளையாடி இருக்கிறோம். இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆனால் எய்டன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமா எங்களுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை."
"தென்னாப்பிரிக்க அணி இங்கு இருக்கிறார்கள் என்பதை எங்களுக்குக் காட்டினார்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள். இந்தப் போட்டி முழுவதும் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சம், இதை நான் விரும்புகிறேன். இறுதிப் போட்டி வரை வந்ததே மிகப்பெரிய சாதனை. அதில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இந்தப் போட்டியில் நாங்கள் சரியான இடத்தில் இல்லை," என்று கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார் கம்மின்ஸ்.