உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2027 இறுதிப் போட்டி எங்கு நடத்தப்படும்? ஐசிசி அறிவிப்பு
துபாய்: லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தி ஓவல் மைதானத்தில், 2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்போட்டி 2027 ஜூன் 9 முதல் 13 வரை நடைபெறவுள்ளது. இந்த மைதானம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்னதாக, 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது."டெஸ்ட் கிரிக்கெட்டின் 150வது ஆண்டை கிரிக்கெட் உலகம் கொண்டாடும் வேளையில், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதற்குரிய சிறப்புடன் அமையும்" என்று ஐசிசி பொது மேலாளர் கௌரவ் சக்சேனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், "எங்கள் விளையாட்டின் வரலாற்றில் ஓவல் மைதானம் ஒரு நீங்கா பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதுடன், பல மறக்க முடியாத தருணங்களையும் நமக்கு வழங்கியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருமையைக் கொண்டாடும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு சிறந்த நினைவுகளை உருவாக்கும் வகையிலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து மற்றொரு உலகத்தரம் வாய்ந்த தொடரை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து இந்த இறுதிப்போட்டியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடத்தவுள்ளது. மேலும், 2031ஆம் ஆண்டு வரை இங்கிலாந்திலேயே இந்த இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து கோடைகாலத்தின் சாதகமான வானிலை காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த இறுதிப்போட்டியை நடத்த இங்கிலாந்தே சிறந்த இடம் என்று ஐசிசி ஏற்கனவே விளக்கமளித்திருந்தது.
"அடுத்த மூன்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளை இங்கிலாந்து நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியை தி ஓவல் மைதானம் நடத்தவிருப்பதை உறுதி செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் நீல் ஸ்னோபால் தெரிவித்துள்ளார். "2023ல் தி ஓவலில் நடைபெற்ற இறுதிப்போட்டி ஒளிபரப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே அடுத்த ஆண்டு நிகழ்வும் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
தற்போதைய WTC சைக்கிள் நிறைவடைய இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ஆஸ்திரேலியா விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 87.50 சதவீத புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மே மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றிய வங்கதேசம் 58.33 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 48.15 சதவீத புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 41.67 சதவீத புள்ளிகளுடன் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications

