திண்டுக்கல்:டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐடிரீம்ஸ் காரைக்குடி காளை அணி அபாரமாக வென்றது. காரைக்குடியின் அனிருத்தா ஸ்ரீகாந்த் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் எடுத்தார்.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. முதல் ஓவரிலேயே சித்தார்த் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பாபா அபராஜித் 4, லோகேஸ்வர் 3, முகிஷேஸ் 7 என தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
ஒரு பக்கம் விஷால் வைத்யா 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்கள் சரிய, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களுக்கு காஞ்சி அணி ஆட்டமிழந்தது.
காரைக்குடியின் லக்ஷ்மண், மோகன் பிரசாத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய காரைக்குடியின் துவக்க ஆட்டக்காரர் வி.ஆதித்யா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அனிருத்தா ஸ்ரீகாந்த் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்தார். 49 பந்துகளில் அவர் 6 பவுண்டரிகள், 7 சிக்சர்களை விளாசினார்.
மான் பாப்னா 24, ஆர். ஸ்ரீனிவாசன் 19 ரன்கள் எடுக்க, 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணி வென்றது.