திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் திருச்சி அணியை 114 ரன்களுக்கு சுருட்டிய காரைக்குடி அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் டி-20 போட்டியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை, கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில் 1 விக்கெட் வித்தியாசத்தி்ல் ஐடிரீம் காரைக்குடி காளை அணி வென்றது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை காரைக்குடி பெற்றது.

நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 114 ரன்கள் எடுத்தது. எஸ். சுரேஷ்குமாரைத் தவிர முதல்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் மணி பாரதி 22 ரன்களும், எம்.எஸ். சஞ்சய் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தனர்.
காரைக்குடியின் மோகன் பிரசாத் 3, யோ மகேஷ், ஆர். ராஜ்குமார் தலா 2 விககெட்களை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய காரைக்குடி அணிக்கு ஆதித்யா 19, ஸ்ரீகாந்த் அனிருத்தா 41 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால், அதற்கு பிறகு வந்தவர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில் காரைக்குடி அணியின் கடைசி ஜோடி களத்தில் இருந்தது. கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில், யோ மகேஷ் ஒரு ரன் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். கடைசியில் 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 எடுத்து காரைக்குடி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.