லண்டன்: நாளை ஆஷஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றி இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் கூறியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதே ஆஷஸ் தொடரை வெல்வதற்காக மட்டும் தான். அந்த வகையில் 2023ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மானப் பிரச்சினையாக ஆஷஸ் தொடர் அமைந்துள்ளது.

இதனால் இழந்த ஆஷஸ் கோப்பையை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இங்கிலாந்தில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த வரலாற்றை மாற்றும் முனைப்புடன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். கடந்த முறை கூட ஆஷஸ் தொடரை சமன் செய்தே ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
இந்த நிலையில் ஆஷஸ் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் பேசுகையில், ஆஸ்திரேலிய அணியின் அதிக வேகம் வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்கள் எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்து பவுண்டரிக்கு செல்லும் என்று தெரிவித்தார். இது ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் இப்படித்தான் சதம் விளாசிய பின், ரசிகர்களை காட்டமாக பேசினார். ஆனால் ஐபிஎல் தொடரில் ஒரேயொரு சதத்தை கடந்து, வேறு என்ன செய்துள்ளார் என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். ஆஷஸ் தொடருக்கு முன்பாகவே ஹாரி ப்ரூக் வார்த்தையை விட்டுள்ளதால், அவரது பேட்டிங் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.