லண்டன்: இந்திய சுற்றுப்பயணத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஓய்வை அறிவித்தார். ஆனால் ஆஷஸ் தொடருக்கு முன்பாக ஜாக் லீச் திடீரென காயமடைந்ததால், அவரது இடத்தில் மொயின் அலியை களமிறக்க இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முடிவு செய்தார். இதன் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டு வந்த மொயின் அலி, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

4 போட்டிகளில் விளையாடிய மொயின் அலி, 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 7 இன்னிங்ஸில் விளையாடி 180 ரன்களும் விளாசி மிரட்டியுள்ளார். இதன் காரணமாக மொயின் அலி அடுத்த ஆண்டு இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், ஜாக் லீச் - மொயின் அலியுடன் இங்கிலாந்து அணி களமிறங்க வேண்டும் என்று ரசிகர்களிடையே குரல்கள் எழுந்தன.
ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இரண்டாவது முறையாக ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மொயின் அலி. இதுகுறித்து மொயின் அலி பேசுகையில், ஆஷஸ் தொடருக்கு முன் ஜாக் லீச் காயமடைந்தது பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. அந்த நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் எனக்கு மெசேஜ் அனுப்பினார். இந்த கம்பேக் சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது. ஆஷஸ் தொடரை அதிகமாக ரசித்து விளையாட முடிந்தது.

மனதளவில் கடினமாக இருக்கும் என்பதோடு, உடலளவில் சிரமங்கள் இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் மறக்க முடியாத நினைவாக ஆஷஸ் தொடர் எனக்கு அமைந்துவிட்டது. மீண்டும் ஒருமுறை இங்கிலாந்து அணிக்காக களமிறங்க மாட்டேன் என்பதால், காயத்துடன் பேட்டிங் செய்ய வந்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது பணிகள் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
இந்திய சுற்றுப்பயணத்திற்காக பென் ஸ்டோக்ஸிடம் இருந்து எனக்கு மீண்டும் மெசேஜ் வந்தால், அந்த மெசேஜை உடனடியாக அழித்துவிடுகேன். இதுவே என் கடைசி ஆட்டம். ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை ஸ்டோக்ஸ் தவறவிட்டது வருத்தமளிக்கிறது. மெக்கல்லம் பயிற்சி முறை அதிகம் பிடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.