மும்பை: இந்திய கபடி அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தால், தயங்காமல் தோனியை தேர்வு செய்வேன் என்று கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.
மும்பையில் நடந்த புரோ கபடி லீக் முதல் ஆட்டத்தில் யூ மும்பா மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதியதில், யூ மும்பா அணி 33க்கு 23 என்கிற புள்ளிகள் கணக்கில் வென்றது. 2வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணி வீழ்த்தியது.

முன்னதாக மும்பையில் நடந்த முதல் போட்டியை தொடங்கி வைக்கும் முன் கோலி பேசியுள்ளார். அந்த நிகழ்வின் போது தமிழ் தலைவாஸ் கபடி அணியின் நட்சத்திர வீரர் ராகுல் சௌத்ரிதான் தனக்கு விருப்பமானவர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்திய கபடி அணிக்கு வீரர்களை தேர்வு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், தயங்காமல் தோனியை தேர்வு செய்வேன். அவரை தொடர்ந்து, ஜடேஜா, ரிஷப் பன்ட், உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்களை தயார் செய்யலாம்.
மன உறுதி, உடற்தகுதி தேவை. கபடி வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் உறுதியாக இருக்கிறார்கள் என்று கோலி கூறினார். ஏற்கனவே உலக கோப்பையில் தோனியின் ஆட்டத் திறன் பற்றிய விமர்சனங்கள் பூதா கரமாகி, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.