சௌதாம்ப்டன் : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் வரும் ஆகஸ்ட் 30 முதல் தொடங்க உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்தியா 0-2 என ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பின்தங்கி இருந்தது. பின் மூன்றாவது போட்டியை வென்று 1-2 என தொடரில் ஒரு அடி முன்னேறியது.
எனவே, நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் இரண்டும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இங்கிலாந்தோ, ஒரு டெஸ்டில் வென்றால் கூட தொடரை வென்று விடும். எனவே நான்காவது டெஸ்டில் இந்தியா வென்று ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
நான்காவது டெஸ்டில் வெல்ல அணியில் யாரை சேர்க்கலாம், இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களை சமாளிப்பது எப்படி என்ற திட்டம் எல்லாவற்றையும் விட டாஸ் மிக முக்கியம்.
காரணம், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் தான் வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இரண்டாம் போட்டியில், மழை பெய்து ஆடுகளம் ஈரமாக இருந்த சூழலில், முதலில் பேட்டிங் செய்வது கடினமான காரியம். அப்போது டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அன்று, இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் ஆடியிருந்தால், தடுமாறி இருக்கும் என்பதே உண்மை.
அதே போல, மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். பேட்டிங் செய்ய ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் டாஸ் வென்றும் பேட்டிங் செய்யாமல் விட்டது தவறான முடிவாக பார்க்கப்பட்டது. அந்த போட்டியில் இந்தியா வென்றது.
நான்காம் டெஸ்ட் நடக்க உள்ள சௌதாம்ப்டன் நகரின் ரோஸ் பௌல் மைதானத்தில், கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் எடுக்கப்பட்ட ரன்களை விட இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். அதே போல, இந்த மைதானம் துவக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே, டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்தால் ஆட்டத்தில் ஒரு படி முன்னே இருக்கலாம். நான்காவது டெஸ்டில் வெற்றி பெற மற்ற திட்டங்களோடு சேர்த்து, டாஸில் வெற்றி, தோல்வி ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.