மும்பை: ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சூழல் ஏற்பட்டால், அந்த ஆட்டம் கொல்கத்தா மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.12ஆம் தேதி வரை லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர்.

குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்.15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ஒரு லட்சம் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அரையிறுதி போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பை மைதானங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிலும் ஐசிசி மற்றும் பிசிசிஐ ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது. அது என்னவென்றால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதும் சூழல் ஏற்பட்டால் அந்தப் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் இல்லாமல், வேறு அணிகளுடன் இந்தியா அரையிறுதியில் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.