இஸ்லாமாபாத்: அணியின் பயிற்சியாளர் இறந்தால் தான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை கிடைக்கும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக கோப்பை தொடரில் சர்ச்சைகளையும், வசவுகளையும் அதிகம் சந்தித்தது பாகிஸ்தான் அணி. தோல்வி, வெற்றி என மாறி, மாறி வந்த முடிவுகளுடன் ஒரு வழியாக அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறி இருக்கிறது.

5 வெற்றிகளையும் நியூசிலாந்துக்கு சமமாக 11 புள்ளிகளையும் பெற்றும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. காரணம் நெட் ரன் ரேட் இல்லாததால் செமி பைனல் வாய்ப்பு பறிபோனது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான படுதோல்வி, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளிடம் தோல்வி ஆகியவை அணியை பெரிதும் பாதித்தன.
இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய சிறந்த அணிகளை வீழ்த்தியும் கூட பாகிஸ்தானால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. அதன் தாக்கன் பல முன்னாள் வீரர்களின் பேட்டிகளின் வாயிலாக வெளிப் பட்டது. தற்போது அந்த அணியின் முன்னாள் வீரர் ஒருவர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
பாகிஸ்தானின் தற்போதைய கோச்சான மிக்கி ஆர்தர் உயிருடன் இருக்கும் வரை பாகிஸ்தானால் கோப்பையை ஜெயிக்க முடியாது என்று முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பேசியதாக செய்தியாளர் ஒருவர் டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். மிக்கி ஆர்துர் இறந்தால் ஒழிய அவர் பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகமாட்டார் என்று டுவீட்டில் கூறியிருக்கிறார்.
2016ம் ஆண்டு பாகிஸ்தான் பயிற்சியாளராக பொறுப்பேற்றவர் மிக்க ஆர்தர். அதற்கு முன்னதாக ஆஸி. தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தவர். அவரது பதவிக்காலம் கடந்த 2017 ஆண்டுடன் முடிவடைய இருந்தது. ஆனால்... சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு, 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.