சென்னை: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி மட்டும் களத்தில் இருந்து சிக்சர் அடித்து முடித்திருந்தால் வேறு மாதிரி உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். கடைசி ஓவரில் 2 பந்துகளில் 10 ரன்கள் விளாசி ஜடேஜா கொடுத்த ட்விஸ்டை, ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.

இந்த வெற்றி, சென்னை அணியின் கேப்டன் தோனிக்கே கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. களத்தில் எந்தவித உணர்ச்சியை வெளிக்காட்டாத தோனி, ஜடேஜாவை தூக்கி கொண்டாடி ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றி குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தோனி களத்தில் நின்று வின்னிங் ஷாட்டை அடித்திருந்தால் அது இந்த வெற்றிக்குக் கூடுதல் சிறப்பைக் கொடுத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
12வது ஓவர் இறுதியில் அம்பாதி ராயுடு ஆட்டமிழந்த பின்னர், கேப்டன் தோனி களமிறங்கினார். இதனால் எம்எஸ் தோனியே ஆட்டத்தை முடிப்பார் என்று பார்க்கப்பட்ட சூழலில், முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இருப்பினும் ஜடேஜா சென்னை அணியின் காப்பாளனாக மாறி வெற்றியைத் தேடி கொடுத்துள்ளார்.
அதேபோல் நடப்பு சீசனில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய கடைசி போட்டியின் போது, சுனில் கவாஸ்கர் தோனியிடம் சென்று தனது சட்டையில் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டார். இது சர்வதேச ரசிகர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுனில் கவாஸ்கர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தோனியிடம் பெற்றுக் கொண்ட ஆட்டோகிராஃபை ரசிகர்களுக்கு காட்டி பெருமைபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.