மும்பை: இந்திய அணியில் தோனியுடன் விளையாடும் போது, அவர் சொல்லும் ஆலோசனைகளை கண்களை மூடிக் கொண்டு நம்புவேன் என்று நட்சத்திர வீரர் சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி செயல்பட்ட போது கும்ப்ளே - ஹர்பஜன் சிங் என்று சுழல் கூட்டணியை உருவாக்கினார். இதையடுத்து தோனி கேப்டனாக வந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் - ஜடேஜா என்ற சுழல் கூட்டணியை உருவாக்கினார். அதேபோல் விராட் கோலி கேப்டன்சியை ஏற்ற போது சாஹல் - குல்தீப் யாதவ் என்ற சுழல் கூட்டணியை உருவாக்கினார்.

விராட் கோலி உருவாக்கிய சுழல் கூட்டணி சிறப்பாக செயல்பட தோனி முக்கியமான காரணமாக அமைந்தார். விக்கெட் கீப்பராக தோனி கொடுத்த ஆலோசனைகளின்படி குல்தீப் யாதவும், சாஹலும் ஏராளமான முறை விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்கள். அதேபோல் மோசமான சூழல்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தோனி ஸ்டம்ப் மைக்கில் கூறிக் கொண்டே இருப்பார்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் சாஹல் அளித்துள்ள பேட்டியில், நான் தோனியின் மிகத் தீவிர ரசிகன். இந்திய அணியில் தோனியுடன் விளையாடிய போது, அவர் எனக்கு கொடுத்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கண்களை மூடிக் கொண்டு செயல்படுத்துவேன். அதேபோல் எனக்கு பல்வேறு அறிவுரைகளை களத்தில் தோனி கொடுத்துள்ளார். தோனிக்கு கிரிக்கெட்டை பொறுத்தவரை அனைத்தும் நன்றாக தெரியும். ஆட்டத்தின் போக்கை அவரைப் போல் யாராலும் கணிக்க முடியாது.
ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேபோல் இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே எனக்கு சிறந்த நண்பர்கள் தான். எப்போதெல்லாம் கிரிக்கெட் பற்றி பேச வேண்டும் அல்லது ஆலோசிக்க வேண்டும் என்று நினைத்தாலும், உடனடியாக செல்போனை எடுத்து தோனி, விராட், ரோகித் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரிடம் பேசிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.