மும்பை: ஒவ்வொரு முறையும் விராட் கோலி பந்துவீசும் போது காயமடைந்துவிடுவாரோ என்ற அச்சம் அணியில் உள்ள அனைவருக்கும் இருக்கும் என்று இந்திய அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் கலாய்த்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. களத்தில் தெறிக்கும் ஆக்ரோஷத்திற்கும், கவர் திசையில் அடிக்கும் பவுண்டரிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அடிமை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு 15 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்களை தனது திறமையால் கட்டிப் போட்டுள்ளார் விராட் கோலி.

பேட்டிங்கில் மாஸ்டர் என்றாலும், விராட் கோலியின் பவுலிங் வித்தியாசமானதாக இருக்கும். அது ஸ்பின்னா அல்லது வேகப்பந்துவீச்சா என்பதே இன்றுவரை ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி கடைசி 2 ஓவர்களை வீசிய போது, பஞ்சாப் அணிக்காக ஆடிய மில்லர், வெளுத்துக் கட்டினார். அன்றுடன் விராட் கோலி பந்துவீசுவதையே கைவிட்டார்.
இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற விருது விழாவில் விராட் கோலி பந்துவீச்சு பற்றி புவனேஷ்வர் குமார் பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அதில் புவனேஷ்வர் குமார் பேசுகையில், இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலிக்கு, தான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்ற எண்ணமிருக்கும். அதன் காரணமாக அவர் வலைபயிற்சியில் பந்துவீசுவார்.
அவர் பவுலிங் ஆக்ஷனை பார்த்தாலே அணியின் ஒவ்வொரு வீரரும் பயப்படுவோம். வித்தியாசமான ஆக்ஷனால் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வாரோ என்று அச்சமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் விராட் கோலிக்கு கிரிக்கெட்டை தவிர்த்து வேறொரு வேலையை செய்தால், எது சரியாக இருக்கும் என்ற கேள்வி புவனேஷ்வர் குமாரிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு புவனேஷ்வர் குமார் தரப்பில், ஒருவேளை கிரிக்கெட்டராக இல்லையென்றால் விராட் கோலி குத்துச்சண்டை வீரராக வந்திருப்பார் என்று பதில் அளித்துள்ளார். விராட் கோலி குறித்த புவனேஷ்வர் குமாரின் பதில் ரசிகர்களிடையே அதிகமாக ட்ரெண்டாகி வருகிறது.