இந்திய வீரர்களை அனுப்புங்கன்னு பாகிஸ்தான் கேட்கட்டும், பரிசீலிப்போம்... சுக்லா
கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் இடம்பெற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரினால் அதை பரிசீலிப்போம் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
இருப்பினும் இதுவரை அந்தக் கோரிக்கை எதுவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வரவில்லை என்றும் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பிஎஸ்எல் எனப்படும் டுவென்டி 20 லீக் தொடரை தொடங்கியுள்ளது. இதில் இந்திய வீரர்களும் இடம் பெற வேண்டும் என்று சமீபத்தில் பிஎஸ்எல் தலைவர் நஜம் சேத்தி விருப்பம் தெரிவித்திருந்தார்.

துபாயில்.. ஷார்ஜாவில்
பிஎஸ்எல் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி துபாய் மற்றும் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு ஆடுகிறார்கள்.

இந்தியர்கள் இல்லை
இருப்பினும் இந்திய வீரர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லை. இந்திய வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை அனுமதி தராமல் உள்ளது.

இப்ப பெர்மிஷன் தர ரெடியாம்
ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டால் இந்திய வீரர்களுக்கு அனுமதி தருவது குறித்து பரிசீலிப்போம் என்று சுக்லா கூறியுள்ளார்.

வரலை, வந்தா பரிசீலிப்போம்
இதுகுறித்து சுக்லா கூறுகையில் இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை. வந்தால் நிச்சயம் பரிசீலிப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications